Sunday, April 22, 2012

பயணங்கள்

தந்தையின் விந்தும் கருவறை நோக்கித்
   தனிமையில் முதன்முதற் பயணம்
முந்தவும் பின்னே இறையருள் கொண்டு
    முயற்சியால் வென்றதும் பயணம்
பந்தென ருண்டு பக்குவத் திங்கள்
      பத்தினில் கருவறைப் பயணம்
வந்திடும் தருணம் வந்ததும் நலமாய்
     வையகம் கண்டதும் பயணம்

கருவறைப் பயண மிருந்ததை மறந்து
      கனவினில் மிதந்திடும் நீயும்
ஒருமுறை எழும்பித் தீர்ப்பினைக் காணும்
     உறுதியை நம்பியே மரணம்
வருவதும் பயணம்அதுவரை உலகில்
     வாழ்வதும் நிலையிலாப் பயணம்
பருவமும் மாறி வளர்சிதை மாற்றம்
     படிப்பினைக் கூறிடும் பயணம்

மடியினில் சாய்ந்து தாயுடன் பயணம்
    மகிழ்வுடன் தந்தையின் தோளில்
நடைதனைப் பழக்கும் நண்பனாய் வந்த
    நடைபயில் வண்டியில் பயணம்
தடைகளை யுடைத்துப் புரளவும் முயன்று
    தவழவும் வாய்த்ததும் பயணம்
விடைகளாய் அறிவும் தெளிந்திடப் பள்ளி
     வகுப்பினிற் சேர்ந்ததும் பயணம்

பிழைப்பினை நாடித் தாயகம் விட்டுப்
      பிரிந்ததும் சுவையிலாப் பயணம்
உழைப்பினப் பொருத்து ஊரெலாம் மாறி
     உலகினில் உழலுதற் பயணம்
தழைத்திடும் இளமைப் பருவமே எமக்குத்
     தந்திடும் துணையுடன் பயணம்
அழைத்திடும் காலம் வரும்வரை நாமும்
     அவனியில் உலவுதல் பயணம்

மனிதனாய் வாழ நல்வழித் தேடி
    மார்க்கமும் பயிலுதல் பயணம்
புனிதமாய்க் கருதும் புகலிடம் தேடி
     புறப்படல் அருள்நிறைப் பயணம்
இனிவரும் மறுமை இனியதாய் அமைய
   இறைவனை வழிபடும் பயணம்
கனியென நினைத்த வாழ்க்கையிற் பின்னர்
    கசந்திடும் பயணமே மரணம்!


(விளம்+மா+விளம்+மா+விளம்+விளம்+மா)


--
”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்