Monday, April 23, 2012

உம்ரா உணர்த்திய உண்மைகள்

உருக்கும் தங்கம் போன்றேநான்
     உணர்ந்து கொண்டேன் உம்ராவில்
 நெருக்கம் இறைவன் மீதினிலே
      நினைவில் நிரம்பக் கண்டேனே
 ஏழு முறைக ளோட்டத்தில்
     இரத்த ஓட்டம் சீராகிப்
 பாழும் நரக விடுதலையும்
     பாவமு மழியக் கண்டேனே!

 மனமு மிறுக்கம் விட்டதுவே
    மகிழ்வில் நிரம்பி வழிந்திடவே
 தினமும் உம்ரா செய்ததினால்
    தேகப் பயிற்சி பெற்றேனே!

 நாளை மஹ்ஷர் நினைவினிலே
     நாங்கள் நின்ற வேளையிலே
 மூளை முழுதும் பயவுணர்வால்
    மூழ்கிப் போகக் கண்டேனே
 புரட்டிப் போட்ட வியப்புடனே
   புத்தம் புதிய வாழ்வெனக்கு
 புரட்சி செய்த மாற்றந்தான்
     புதிதாய்க் கண்டு கொண்டேனே!

 புனித உம்ரா செய்ததினால்
    புடமிடு தங்க மாகினனே
 இனியும் தொடராய் இறையவனே
    இதனைச் செய்ய அருள்வாயே..!

-  ”கவியன்பன்” கலாம்