Monday, June 18, 2012

"மிஉராஜ்" - ஷெய்ஹுநாயகம் அவர்களின் விளக்கம்.

மிஉராஜ் என்பது இறைவனல்லாத மற்றெல்லாவற்றையும் விட்டு நீங்கியிருப்பது.
இறைவனிலேயே தனது நாட்டத்தைச் செலுத்தி அவனல்லாது வேறில்லையென
முழுமயாய் நினைத்து நானும் அதுவுமொன்றே அதற்கும் எனக்கும் எந்தப்
பிரிவுமில்லை நான் பூரணமாய் அதிலானேன் எனக் கருதித் தன்னையும் தன்
எண்ணத்தையும் முழுமையாய் இறையில் அருப்பணிப்பதே மிஉராஜ் எனும்
உயர்ச்சியாகும். இந்த மிஉராஜின் முழுமை இறைவனை முழுமையாய் பார்வை
மழுங்காமல் காண்டலாகும். பார்வை மழுங்கலென்பது இறைவனைப் பிரிவு பிரிவாய்
சிறிது சிறிதாய் எண்ணி நானும் நீயும் வேறு எனும் நிலையில் எண்ணத்தைச்
சின்னபின்னப்படுத்தி ஒரு பொருளைக் கூறுபடுத்துவது போல் இறைவனைக்
கூறுபடுத்திச் சித்ரவதை செய்யும் நிலையாகும். இந்த உயர்ச்சியின் நிலை மட்டையும்
கடக்காது அனைத்தும் நானே எனும் மன்ஸூருல் ஹல்லாஜ் (ரலி) அவர்களின்
உன்னத நிலையை அடைவதாகும்.

அனைத்தும் நானே: நானே ஹக்கு, எனும் நிலையே மட்டைக்கடக்காத உண்மை நிலையாகும்.

நானே இறைவன் என்று மமதையுடன் பிர்அவுன் கூறிவந்த நிலைமையே மட்டைக் கடந்த
நிலையாகும். எனவே இதில் இரண்டு நிலையுண்டும். ஒரு நிலை, ஹக்கையே அறியாது
மமதை கொண்டு தானே இறைவன் என்று கூறிக்கொண்டது. இரண்டாவது நிலை,
அனைத்தும் நானே என்று இறைவனை அறிந்து பூரணமாய் இரண்டறக் கலந்து
மாறா இன்பமடையும் நிலை. அறியாத மூடர்கள், இறைவனைக் கூறுபோட்டு
இறை தண்டனையை அடையும் நிலையையும், இறையின்பத்தை அடையும் நிலையையும்
இரண்டாகக் கலந்து காண்பதோடு உண்மைக்கு மாறாகவும் பேசித் திரிவது பித்துப்பிடித்த
மந்த நிலையாகும்.

--"ரிசாலத்துல் கௌதிய்யா"-எனும் நூலுக்கு.. சங்கைமிகு ஷெய்குநாயகம் அவர்கள் எழுதிய
விளக்க உரையிலிருந்து.

Thanks - Sirajudeen