Sunday, September 27, 2009

குருவை அறிவது எப்படி.?

கேள்வி: ஆன்மீகத் தேடல் உள்ள ஒரு மனிதன் தன் குருவை எப்படி அடையாளம் கண்டுக் கொள்ளமுடியும்.?

பதில்: ஓரு குருவிடம் பேசிப்பார்க்கலாம். பேசும்போது உரியமாதிரி முறையோடு பேசவேண்டும். அப்போதுதான் தான் யாரென்பதைக் காட்டிக்கொடுப்பார் அல்லாமல் அதற்கு மாற்றமாய் போய் பேசினால் பொதுவாய் ஆலிம்களுடன் பேசுவதைப் போலிருக்கும். ஆலிமுடன் பேசுவதைப்போன்று பேசி அனுப்பிவிடுவார்கள்.
அறியவேண்டும் என்ற நோக்கத்தோடுச் சென்றால் அவர்களோடு பேசுவதைக் கொண்டு அவர்கள் ஞானம் தெரிந்தவர்கள், விளங்கியவர்கள் ஒரு செய்குகிற்கு பொருத்தமானவர்கள் எனக் கண்டுப்பிடித்துக் கொள்ளலாம்.
சிலநேரங்களில் தேட்டம் உள்ளவர்கள் மித்தம் விருப்பத்தோடு எனக்கு ஒரு காமிலான (பூரணமான) செய்கை (குருவை) நீ எனக்கு காட்டியருள்வாய் யா அல்லாஹ் என்று துவா (பிரார்த்தனை) செய்தால் கனவில் காட்டித்தருவதும் உண்டு. கனவில் காட்டப்படுவதுதான் மிகவும் நல்லது.
படேஷா ஹஜ்ரத் இருந்தார்கள் (அவர்களை) மஞ்சுவி நாயகம் என்பார்கள். சிறந்த வலீயாக அவர்களுடைய காலத்தில் திகழ்ந்தார்கள். ஆனால் அவர்கள் அரபி படித்தவர்கள் அல்ல. ஒரு அலுவலகத்தில் அதிகாரியாக இருந்து வேலைப் பார்த்தவர்கள். திடிரென அவர்களுடைய நிலமையெல்லாம் பலவகையிலும் மாற்றங்கண்டு சில விசயங்களைச் சொல்லத் தொடங்கினார்கள்.

பொது மக்களுக்கு ஒரே குழப்பம் ஏற்பட்டுவிட்டது. இவரொரு உம்மி (படிப்பறிவு இல்லாதவர்) அரபியல்லாதவர் இவருக்கு என்னத் தெரியும் என்றெல்லாம் கூறினார்கள். ஆலிம்கள் அதற்கு எதிர்ப்பு காண்பித்தார்கள்.
மிகச்சிறந்த ஒரு ஆலிம் அப்துல் கரீம் என்பவர் அதற்கு (மஞ்சுவி நாயகத்திற்கு) பத்வாவும் கொடுத்து விட்டார்.
அப்துல் கரீம் ஆலிம் (தனக்கு) ஒரு செய்கு (குரு) தேவை என அல்லாஹ்விடம் துவாச் செய்துவிட்டு அவர் படுக்கின்றபொழுது ஒரு கனவு தென்படுகிறது. கனவில் படேஷா ஹஜ்ரத் போகிறார்கள். உடனே எழுந்து நெஞ்சினில் துப்பிவிட்டு மறுபகுதியில் திரும்பப் படுக்கின்றார்கள். (மீண்டும் கனவில்) படேஷா ஹஜ்ரத்தான் போகிறார்கள். மீண்டும் எழுந்து மறுபகுதிக்கு திரும்பிபடுக்கிறார்கள். அப்போதும் படேஷா ஹஜ்ரத் அவர்கள்தான் போகிறார்கள்.

காலத்திற்கு உள்ளவரைத்தான் கனவுகாட்டும். இவர்களுக்கு மிகவும் மனம் குழம்பிவிட்டது. அவர்களை நேரில் சென்று பார்க்கும் வேளையில் அவர்கள் (படேஷா ஹஜ்ரத்) கேட்கிறார்கள் விளங்கிவிட்டிர்களா.? என்று.
மிகப்பெரிய ஆலிம் (அப்துல்கரீம் படேஷா ஹஜ்ரத்) அவர்களுக்கு ஹித்மத் (பணிவிடைகள்) செய்யக்கூடியவராக பின்னாலில் இருந்தார்கள்.
எங்கள் தந்தை தேவ்பந்தில் ஓதிவிட்டு வருகிறார்கள். தேவ்பந்த் ஆலிம் ஒருவர் வந்துள்ளார் என்று ஊரெல்லாம் பேச்சு. அவர்களுக்கு வயது 20 – 21 இருக்கும். ஆலிம்களெல்லாம் படேஷா ஹஜ்ரத்தைப்பற்றி கூறி பழைய பத்வாவிற்கு தந்தையுடைய கையெழுத்தும் வாங்கிவிட்டார்கள். தந்தையும் கையெப்பம் போட்டுவிட்டார்கள்.
திடிரென ஒரு நாள் கனவில் காண்கிறார்கள் தந்தை ஆகயத்தில் சும்மா இருப்பதைப் போன்றும் இடுப்பிலிருந்து கீழ்வரை இருட்டுக்குள் இருப்பது போன்றும் மேலாக ஒளிவு தெரிவதைப்போன்றும் ஒரு காட்சி. ஆனால் அதற்கு மேலாக செல்ல வழியே இல்லை. அப்படியே இருந்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது தந்தை நான் இவ்வளவு கஷ்டத்தோடும் துன்பத்தோடும் இருந்தேன். எனக்கு வந்து உதவிச் செய்த நீங்கள் யார்.? எனக் கேட்கிறார்கள்.
அப்போது அவர்கள் சொன்னார்கள் நான் இந்த காலத்திற்குரிய ஜமான் சாஹிப் ஜமான். என்னுடைய பெயர் பதுருத்தீன் சாஹிப் என்றுச் சொல்லிவிட்டு மறைந்து விட்டார்கள்.
படேஷா ஹஜ்ரத் அவர்களின் பெயர் பத்ருத்தீன் இதுதான் செய்திபென்பதை தந்தை அறிந்துக் கொண்டு பத்வாவைக் கேட்டு தாங்கள் இட்ட கையொப்பத்தை நீக்கிவிட்டார்கள். இதுபோன்று கனவில் தென்படுவது முக்கியமானது.
ஒருவருடைய படிப்பறிவைக் கொண்டு கண்டுபிடிக்க முடியாது. படிப்பில்லாதவர்களும் இருக்கிறார்கள். அவர்களை ஞானத்தைக் கொண்டுதான் காணமுடியும். இப்போதுள்ள தரீக்காக்கள் எல்லாம் ஞான விளக்கங்கள் கொடுப்பதில்லை.!

- இமாம் அஸ்சையது கலீல் அவுன் மௌலானா அவர்கள்.