Saturday, September 17, 2011

சோபனம் பாடி மகிழ்ந்திடுவோம்

ஷவ்வால் பிறையின் பதினாறில்
சுந்தர மகவாய் அவ்ன் நாதர்
அவனியை காக்க அவதரித்த
அருள்நிறை ஜோதியை பாடுவமே

பாடும் பொருளாய் திலங்கிடுவோர்
எம் பாவம் போக்கி நிலைத்திடுவோர்
மீட்சி கொடுத்தே யாவர்க்கும்
மேன்மை தந்தோரை பாடுவமே

பூமிக்கருட்செய இறை நினைத்த
அருட்கொடை வரிசையின் வரிசையரே
அருளாய் எங்கும் நிறைந்து நிற்கும்
அற்புதரை நாம் பாடுவமே

இணையில்லாத இறை விளக்கம்
இறை வலிய் உங்கள் நிறைபோதம்
இரவா நிலையிலும் ஈந்து வரும்
இயல்பினரை நாம் பாடுவமே

எழுத்தாய் மொழியாய் இன்சொல்லாய்
ஏகம் விளக்கி இறை பொருந்த
நிறைவாய் நிற்கும் தத்துவரை
தவறாமல் நாம் பாடுவமே

தங்களை காண்பது நலம் பயக்கும்
எங்களின் எல்லா குறை மறையும்
மறுவிலா முழுமதி குலம் தழைத்த
குருகுல நாதரை பாடுவமே

எங்களின் குலமும் தழைத்திடவே
குறையில்லாது வளர்ந்திடவே
பூரணர் அருளைப் பெற்றிடவே
பூர்த்தியாகப் பாடுவமே

நிறைந்த புகழும் சாந்தியுடன்
சமாதான முதலாம் நிறைவுகளும்
நித்தியமாக தாங்களுக்கே
எங்களின் இதயம் பாடிடுமே


M.A.சிராஜுதீன் ஹக்கியுல் காதிரி B.com., D.T.Ed.( camp:dubai ) மதுக்கூர் .