Showing posts with label அமீர்அலி. Show all posts
Showing posts with label அமீர்அலி. Show all posts

Sunday, May 1, 2011

உடன்கட்டை ஏறுவோம்



என்னை நான் தேடி
என்னுள் அலைந்தாடி
உந்தன் கரம் தேடினேன்

சிந்தை திரியேற்றி
என்னுள் பலச்சாற்றி
உன்னை நான் காண்கிறேன்

காற்றின் கைக்கோர்த்து
நகைத்து விளையாடும்
அலையை நான் காண்கிறேன்

அலையின் நிலைபோல
பொழுதும் அலைமோதும்
நினைவில் ஏன் வாழ்கிறேன்

உயர பறந்தும் - சிரம்
பணிந்து மகிழ்கின்ற‌
பறவை மனம் கேட்கிறேன்

பிறந்த மனம் தன்னில்
திரியும் பொருள்கண்டு
எரிந்து நான் வேகிறேன்

ஞானம் தனைத்தேடி
கோணம் பலவாக
திரியும் பலமாந்தருள்

தேடி எமைவந்து
கூடி நலங்காக்கும்
குருவையெப் போற்றுவேன்

பொழுதும் ப‌ல‌வாக‌
விழுந்து தொழுதாலும்
இறையை அறிந்தாரில்லை


அடையும் இட‌ம‌றியா
அலைந்து திரிவோர்க‌ள்
அறிவில் சிறந்தோரில்லை

வ‌ழிவிடும் தோற்றம்
இடைவெளிக் காட்டும்
நிலைத‌னை மாற்றவே

குவ‌ல‌ய‌ம் எங்கும்
நறும‌ண‌ம் பொங்கும்
ந‌பிபுக‌ழ் பாடுவோம்

இடிவ‌ரும் முன்னே
வெளிவ‌ரும் மின்னல்
ஒளித‌னைப் போல‌வே

இழிப‌வ‌ர் கூட்ட‌ம்
ஒழிவ‌த‌ற்க்(கு) உட‌ன்
க‌ட்டையும் ஏறுவோம்


அமீர்அலி - மதுக்கூர்

Monday, November 29, 2010

ஞானம் சன்னிதானம்

ராகம்: பூவில் வண்டு கூடும் கண்டு......

ஞானம் என்னும் தானம் த‌ந்த‌
கோநின் ச‌ன்னிதான‌ம்

அற்புத‌ம் நாடாத‌ போதும்
சொற்ப‌த‌ம் கொண்டாட‌க் கூடும்
பொற்ப‌த‌ம் தான் நாடுவோர்க்கு
க‌ற்ப‌தே அற்புத‌மாகும்

நாடும் எந்த நாடும் - இன்ப‌
ஞான‌த் தென்றலாடும்!
தேடும் தீங்கு யாவும்
அண்டிடாமல் அஞ்சியோடும்!
பாடும் போற்றி ஓதும் இந்த
காலம் நம்மை ஆழும்!

போற்றுங் கூட்டம் யாவும் - என்றும்
ஏகம் மாலை தூவும்
காற்றில் ஆடும் நீர்போல் - உயிர்
மேகம் நாளும் மேவும்

போதும் என்றபோதும்
நின்றிடாது தந்த வானம்!
வேதம் சொன்ன போதம்
எங்கும் ஓங்கும் சங்கநாதம்!
நீதம் நின்று ஓதும் எந்த‌
நாளும் தங்கள் நாமம்!

நேற்றுக் கொண்டகோலம்
என்றும் மாறும் வர்ணஜாலம்-
ஏற்றம் கொண்டுச் சேர்க்கும் எம்
தூதர் தந்த பாலம்

-அமீர்அலி

Sunday, October 3, 2010

ம‌றந்தே பிறந்தேன்...

உன்னை மறந்துவிட்டேன்

உண்மை தெரியும்வரை

தன்னில் தனையழிக்கும்

தாகம் எழும்பும்வரை


தத்தளிக்கும் தளமேல்

தாவி திளைத்திருந்தேன்

தாங்கி எனை நடத்தும்

தன்மை மறந்துவிட்டேன்


விட்டெரிந்த புவிமேல்

வீறு நடைபயின்றேன்

விண்ணில் பிரிந்தவைகள்

எண்ணில் நிறையக்கண்டேன்


காணும் பரம்பொருளை

காண விழைந்திருந்தேன்

கண்டும் மறந்தவனாய்

காணும் விழியிழந்தேன்


தேட்டம் நிறைந்தவனாய்

தேடி அலைந்திருந்தேன்

தேம்பி அழுதவனாய்

தேகம் அணிந்திருந்தேன்


விட்டில் வெளிச்சத்திலே

மட்டில்லா இன்பங்கொண்டேன்

முட்டும் கதிரவனை

முற்றும் மறந்துவிட்டேன்


வேத விளக்கத்தில்வீண்

வாதம்பல‌ புரிந்தேன்

வாட்ட‌ம் வ‌லுத்த‌மையால்

வாடி உனைதொழுதேன்



சூலும் நிறைதிரையால்

மேலும் மருண்டுவிட்டேன்

நாளும் ந‌டைபிணமாய்

வாழும் நிலைய‌ணிந்தேன்



வேதி பொருளனைத்தும்

சோதி வ‌டிவ‌மென்றேன்

ஆவி விடுத்த‌வ‌னாய்

ஆதி நிலைய‌டைவேன்


காட்சி ப‌ல‌வ‌துமாய்

ஆட்சி புரிந்திருந்தேன்

மீட்சி பெருவ‌த‌ற்க்கே

சாட்சியென‌ பிறந்தேன்


ஏகம் அணிநதுகொள்ள

தேகம் துறந்துவிட்டேன்

மேகம் திரண்ட‌துப்போல்

பாகம்பல மறந்தேன்


ஆற்றல் நிறைந்தயுனை

ஆறில் அணைத்துக்கொண்டேன்

ஏட்டை துறந்தமையால்

ஏற்றம் அடைந்துவிட்டேன்


ஐந்தில் திரிந்தயுனை

ஆறில் இனமறிந்தேன்

ஏழின் மகத்துவத்தை

எட்டும் கலையறிந்தேன்


சொர்க்க தலைவரின்மேல்

சோபனம் கூறிவிட்டேன்

கோத்திரத்தார் அவர்தம்

ஆசியை அண்டிவிட்டேன்


வேதம் தந்த தூதர்

போதும் என்றுரைத்தேன்

பாவம் தனியும்வரை

பாதம் விழிந்தெழுவேன்



அங்கம் உடுத்தவரின்

அங்கை பிடித்துவிட்டேன்

அஞ்சி தொழுதயுனை

அன்றி தொழுதுவிட்டேன்


எழில்கொஞ்சும் உனதருவை

கலீல்(உள்)தஞ்சம் அடையக்கண்டேன்

இன்பத் தமிழ்மொழியே

என்றும் உனைத்தொழுவேன்.!



- அமீர் அலி ஹக்கியுல் காதிரி

Sunday, September 12, 2010

யாவுமாகலாம்...

தோன்றிவரும் அத்தனைக்கும்
சான்றுபலக் கூறலாம் -
ஊன்றுமிடம் கண்டுகொண்டால்
ஞாலம் சிறிதாகலாம்!
வானத்துக்கும் வையத்துக்கும்
சேர்த்து பறிமாறலாம் -
நீரிழுக்கும் வேருக்குள்ளும்
நீயிருந்து ஆழலாம்!

காணும்பொருள் கண்களுக்கு
எண்ணிக்கையில் கூடலாம் -
எண்ணமது வென்றுவிட்டால்
எண்களற்றுப் போகலாம்!
நாட்டம் நிறைதேட்டங்கொண்டால்
ஈசனிடஞ் சேரலாம் -
ஆடும் மயில் தோகையிலும்
ஏகன்தனைக் காணலாம்!

பொங்கிவரும் தீக்குழம்பின்
அங்கம் உனதாகலாம் -
கொட்டும் மழை நீர்த்துளிக்குள்
நீந்தி விளையாடலாம்!
ஓய்வெடுக்க தென்றலது
உன்னுதவி நாடலாம் -
சுற்றுங்கோள்கள் பற்றிக்கொள்ள
உன்கரத்தைத் தேடலாம்!

பாடம்பல பற்றிக்கொள்ள
பள்ளிக்கூடம் சாரலாம் -
பள்ளிச்சட்டம் அத்தனையும்
அங்கம்தனில் சூடலாம்!
நேரம் நொடி தாண்டிடாமல்
சேர்ந்து துதிப்பாடலாம் -
சட்டம் மட்டும் ஒட்டிக்கொண்டால்
சத்தியமே மாறலாம்!

-அமீர் அலி

Tuesday, August 24, 2010

அகமிய கருவே

அகமிய கருவே
அனுபவ உருவே
இறையில் உறைந்த பிறையே!

ஒளிரும் சுடரே
மிளிரும் எழிலே
அறிவின் திறளெம் குருவே!

திறந்த வெளியின்
பரந்த அறிவை
வெளிக்கொணர்ந்ததாம் ஏகம்!

நித்தம் தனியும்
புவிதனில் எங்கும்
ஞானமெனும் உயர்தாகம்!

மெல்லிய உருவாம்
மின்னிய நடையாம்
கருணை மழைபொழியும் விழியாம்!

பணிவினில் மரமாம்
பொறுமையில் புவியாம்
அன்பின் இயற்பெயர் ஹலீலாம்!

மலரும் நுகரும்
அகமிய வாசம்
அதரம் திறந்தால் கமழும்!

மொழியிற் முதலாம்
அறபும் தமிழும்
விரலின் நுணியில் தவழும்!

பிறை பத்தும் நான்கில்
சித்தி நிறைத்தருளி
புத்தி மறைத்தருளும் குருவே!

பித்தாம் உம்மேல்
வித்தோம் எம்மை
நித்தம் அழைத்துச் செல்வீர் அருளே!

ஆதம் நபிமுதல்
தாஹா நபிவரை
அதன்பின் தோன்றியோ ரெல்லாம்!

கண்டோம் நன்றாய்
உம்மில் ஒன்றாய்
ஒன்றில் ஒன்றிவிட்ட உயிரே!

நபியை மதியார்
இறையின் சதியார்
இவர் விதியென இவரறியார்!

பொருளைக் க‌ண்டு
புரளும் கூட்டம்
அலைமுன் திரளும் நுரையாம்!

இழியும் கூட்டம்
அழியும் மொருனாள்
விழியின் நெதிராம் இறையே!

அடைப்பால் அறிவின்
திடைப்பால் பொருளின்
கடப்பாய் பொறுமையின் நிலையே! ‍இறைனீ
கடப்பாய் பொறுமையின் நிலையே!
கடப்பாய் பொறுமையின் நிலையே!

-அமீர்அலி ஹக்கியுல் காதிரி
துபாய்

Saturday, August 14, 2010

நினைவினில் நிலை மனமே

நினைவினில் நிலை மனமே

நினைவினில் நிலை மனமே
உயர்வினை குருமனம் அடைதனிலே!

க‌ருவினில் க‌லந்த‌ நிலைய‌துப்போல்
உருவினில் உமைத்தொழ உத‌விட‌வே!
கட‌ல‌லை க‌ரைத்தொட விரைவ‌துப்போல்
அனுதின‌ம் அகமிய‌ம் அறிந்திட‌வே! [நினைவினில்]

அருவ‌மும் உருவினை வெளிப்படவே - ப‌ல‌
துருவ‌மும் உருவ‌தில் மறைந்த‌துவே!
ச‌ம‌வெளிச் சமைத்த‌ இடைவெளியில்
விடைக்கொணர் திரைத‌னை நிறைத்திட‌வே! [நினைவினில்]

விதைய‌து ம‌ர‌மென‌ வெளிப்பட‌வே
ம‌றந்த‌ன மர‌ம‌து விதைய‌துவே!
ம‌ர‌ம‌து பொருளென உருப்பெறவே
பொருளது ம‌றைத்த‌து மரமதுவே! [நினைவினில்]

ஒன்றென‌த் தென்றலும் உழல்வ‌துப்போல்
நின்றுமை அண்டிட‌ல் ஒன்றிட‌வே!
நிக‌ரிலா சிக‌ர‌த்தின் சிரம‌துப்போல்
ப‌ணிவ‌து ம‌ன‌மதில் ப‌ட‌ர்ந்திட‌வே! [நினைவினில்]

இருந்த‌ன இருப்பன இக‌முழுதும்
க‌ட‌ந்த‌ன ப‌ட‌ர்ந்த‌ன ப‌லனிலையாம்!
சிறந்த‌ன இவையினுள் இருப்ப‌னவாம்
சிர‌ம‌து பணிந்திடும் குருப்பத‌மே! [நினைவினில்]

அமீர்அலி ஹக்கியுல்காதிரி
துபாய்

Saturday, August 7, 2010

அன்றிவேறு ஒன்றுமில்லை குருவே

ஒன்றுமில்லை ஒன்றுமில்லை குருவே! ‍‍உமை
அன்றிவேறு ஒன்றுமில்லை குருவே!
கண்டுகொண்டோம் கண்டுகொண்டோம் குருவே! எங்கள்
கண்களுக்கு என்றுமில்லை அழிவே!

ஹாஷிம் குலவாசம் எங்கள் குருவே! விழி
பேசும் முறை சான்றுரைக்கும் குருவே!
யாஸின் தவச்சீலர் எங்கள் குருவே! சிறு
மாசும் மறந்தண்டிடாது குருவே!
அண்ணலிட்ட போர்வையினுள் குருவே! அக
மின்னலினை ஏந்தி வந்தீர் குருவே!
வீசும் தென்றல் காற்றினைப்போல் குருவே! உயர்
நேசமதில் வாசநபி உருவே! [ஒன்றுமில்லை]

சூனியத்தின் ஆதினிலை குருவே! ‍திட‌
மேனித்திரையால் மறைத்தீர் குருவே!
நானிலத்தின் வேந்தரெங்கள் குருவே! மதி
நானீயெனும் நஞ்சறுத்த குருவே!
பன்மையென்றும் நன்மையில்லை குருவே! உயர்
உண்மைதனை ஊற்றிவிட்ட குருவே!
மேதை நபித்தூதர் எங்கள் குருவே! அதன்
பாதைத் துளிமாறவில்லை குருவே! [ஒன்றுமில்லை]

சத்தியத்தின் அச்சகவெம் குருவே! தின‌ம்
உண்மை மெச்சும் புத்த‌க‌வெம் குருவே!
பாத‌ம் நிறைபற்றிக் கொண்டோம் குருவே! எங்க‌ள்
ச‌ந்ததிக்கும் வேண்டுமிந்த அருளே!
க‌ம்ப‌ரை நேர் க‌ண்ட‌தில்லை குருவே! என்றும்
அந்த‌க்குறை எங்களுக்கு நிறைவே!
முத்தமிழும் முத்த‌மிடும் குருவே! தங்க‌ள்
சித்தமுழுச் ச‌த்து நிறைந்த‌மிழே! [ஒன்றுமில்லை]

பேரிணையை விற்றகன்றோம் குருவே! பெரும்
பேரினையும் பெற்றுவிட்டோம் குருவே!
தீய‌த‌னை விட்டொழித்தோம் குருவே! சுடும்
தீய‌திலும் முக்குளித்தோம் குருவே!
ஓர‌ணியை சூடிக்கொண்டோம் குருவே! என்றும்
ஓர‌ணியில் சூழ்ந்து நிற்போம் குருவே!
நின்ம‌தியில் நின்றுவிட்டோம் குருவே! எங்க‌ள்
நிம்ம‌திக்கு என்றுமில்லை மறைவே! [ஒன்றுமில்லை]

பாழடைந்த பாதைதனில் குருவே! எங்கள்
காலடைந்த வேதனைகள் பலவே!
பித்தரென மற்றுரைத்தார் குருவே! எமை
சித்தரென மாற்றிவைத்தீர் குருவே!
வேதம் தந்த தூதர்நபி குருவே! மீது
ஓதும் புகழ் குன்றிடாது குருவே!
குன்றிவிடும் என்றநிலை வரவே முன்
நின்றிடாமல் சென்றடையும் உயிரே! [ஒன்றுமில்லை]

அமீர்அலி ஹக்கியுல்காதிரி
துபாய்