Thursday, February 20, 2014

இறைத் தூதரின் (ஸல்) தூதுவர்கள்

எங்கும் பரிபூரணமாய் நீக்கமற நிறைந்து பரவி விரிந்து, எல்லாமாய் ,எங்குமாய் இருந்து இரட்சிக்கும் ஏகனின் பரிபூரண இறுதி இறைத்தூதர் நாயகம் (ஸல்) அவர்களின் பூவுலக வருகையென்பது உடல் ரீதியாக பிந்தினாலும் அவர்களே கூறுவதுபோலமுதல் மனிதர் ஆதம் (அலை) உருவாகும்போது அவர்கள் மண்ணுக்கும் நீருக்கும் இடையில் இருக்கும்போதே  நான் நபியாக இருந்தேன் என்பதை பார்க்கும் போது நாயகம் (ஸல்) அவர்களே ஆதியாகவும் அந்தமாகவும் இருக்கிறார்கள் என்பது அறியக்கிடக்கிறது.

அனைத்தின் மூலவனான அல்லாஹ்விலிருந்து அவனை அறிவதற்கு வெளியான மனித இனம் தனது மூல உண்மையை மறந்து மனம்போன போக்கில் வாழ்ந்து மிகவும் கஸ்டங்களுக்கு உள்ளான நிலையில் பேரருளானாகிய அல்லாஹ்வின் கருணையின் விளைவாக மனிதனின் படைப்பின் நோக்கத்தை விளக்கி அவனை நல்வாழ்வு வாழவைக்க இந்த அகிலங்களுக்கு அருட்கொடையாக மனித கோலத்தில் பின்னால் வெளியானவர்கள் தான் நாயகம் (ஸல்) அவர்கள் என்பதை இஸ்லாமியர்கள் நன்கு அறிவார்கள்.

அவர்களின் மனித உடல் வாழ்வின் துவக்கம்முதல் இறுதி வரை அவர்களின் ஒவ்வொரு அங்க அசைவும் அறிவின் அசைவும் என்றும் அழியாத புத்தகமாய் இப்பூவுலகில் பதிந்துவிட்டது. ஏன்பதுதான் குர்ஆன் ,ஹதீஸ்குதுஸி ,ஹதீஸ் மற்றும் அவர்களின் புனித வாழ்க்கை சரித்திரம் மூலம் நாம் அறிந்து கொள்கிறோம். தன்னுடைய இம்மனித கோல வரவிற்கு காரணமான இறைவனை பூரணமாய் விளக்கி வாழ்ந்து ஒவ்வொரு மனிதனும் இப்படித்தான் வாழ வேண்டும் என்று இறைவனின் சாட்சியுடன் இவ்வுலகில் வாழ்ந்து காட்டிய மனித குல வழிகாட்டிதான் நம் தலைவர் நாயகம் (ஸல்) அவர்கள்.
இவர்களின் வாழ்வுதான் மனித இனத்திற்கு பொருத்தமானது என்பதை இறைவனும் திருக்குர்ஆனில் சாட்சி பகர்ந்துள்ளான். இந்த வாழ்வின் பூரணத்தை சஹாபா பெருமக்களையும் சாட்சியாக்கி இறுதி ஹஜ்ஜின் உரையில் நாயகம் (ஸல்) அவர்கள் என்னுடைய மார்க்கத்தை பூரணப்படுத்தி விட்டேனா? ஏன்று கேட்டு அனைவரும் சாட்சியாக அதை ஏற்றுக் கொண்டதை சரித்திரம் பதிவு செய்துள்ளது. இனி ஒரு மனிதன் இப்பூவுலகில் சிறப்புடன் வாழ இதைவிட சிறந்த வழிமுறை இல்லை என்பதை இன்று முழு உலகமே ஏற்றுக் கொண்டுள்ளது.
இந்த பூவுலகில் மனித இனம் தோன்றி மறைந்து கொண்டே இருக்கிறது. எனவே பெருமானார (ஸல்) அவர்களின் புனித பூவுடல் மறைவிற்கு பிறகு புதிதாய் வருபவர்களுக்கு எவைகள் எல்லாம் வழிகாட்டும் என்பதை நாயகம் (ஸல்) அறிவுறுத்தியுள்ளதை நாம் பின் பற்ற வேண்டும்.
1.எனது மறைவிற்கு பிறகு இரண்டை விட்டுச் செல்கிறேன். அதைப் பற்றி பிடித்துக் கொள்ளுங்கள் அல்குர்ஆன் எனது திருக்குடும்பத்தார்கள்.
2.என்னுடைய சஹாபாக்கள் அனைவரும் வானில் மின்னும் நட்சத்திரத்திற்கு ஒப்பானவர்கள். அவர்களில் யாரை பின்பற்றினாலும் நீங்கள் வழி தவற மாட்டீர்கள்.
3. எனது மறைவிற்கு பிறகு அல்குர்ஆனையும் எனது சுன்னத்தான நடைமுறையையும் பற்றிக் கொள்ளுங்கள்.

பெருமானார் (ஸல்) அவர்களைப்பற்றி அன்னை ஆயிஷா நாயகி (ரழி )அவர்கள் கூறும்போது பெருமானார் (ஸல்) அவர்கள் வாழ்வு குர்ஆனாகவே இருந்தது என்று கூறுவதில் இருந்து இறைவன் சொல்லின் இலக்கணமாக செயல் வடிவாகவே பெருமானார் (ஸல்) அவர்கள் வாழ்ந்தார்கள். என்பது அறியக்கிடக்கிறது. எனவே எந்த ஒரு மனிதனும் இறைவனை மட்டுமே பின்பற்றுவேன் என்று கூறினாலும்  அவன் பெருமானார்(ஸல்) அவர்களைத்தான் பின்பற்றி வாழ வேண்டும் என்பதும் நாயகம் (ஸல்) அவர்களை நேசித்தாலே இறைவனை நேசிக்க அடிப்படையாக அமையும் என்பதும் புலனாகிறது.

அல்குர்ஆனிலே இறைவன் கூறுகிறான் நபியே நீங்கள் இந்த மார்க்கத்தை தந்ததற்கு பகரமாக எந்த ஒரு கூலியையும் எதிர்பார்க்கவில்லை. என்னுடைய குடும்பத்தை நேசம் கொள்வதைத் தவிர என்று கூறுங்கள் என்கிறான். ஏனெனில் பெருமானார் (ஸல்) அவர்களின் திருக்குடும்பத்தார்கள் மட்டுமே இறைவனின் உண்மையை உலகிற்கு தருவதற்கு தான் தேர்ந்தெடுத்துள்ளதை நன்கு அறிய முடிகிறது. எனவே பெருமானார் (ஸல்) அவர்களின் உடல் மறைவிற்கு பிறகு குர்ஆனின் வாக்கியப்படியும் நாயகம் (ஸல்) அவர்களின் ஹதீஸின்படியும் பெருமானார் (ஸல்) அவர்களின் திருக்குடும்பம் மட்டுமே மார்க்கத்தை பின் பற்றிக் கொள்ள தலையாய வழிக்காட்டும் ஒளிவிளக்காய் அமைந்துள்ளதை அறிய முடிகிறது. எனவே பெருமானாரின் மறைவிற்கு பிறகு வந்துள்ள சமுதாயம் பெருமானாரின் திருக் குடும்பத்தினர்களை இனம் கண்டு மார்க்கத்தைப் பற்றிக் கொள்ள வழிகிடைக்கிறது. இது மிகவும் எளிதில் மனிதர்களுக்கு நாயகம் (ஸல்) அவர்கள் தந்த வழி என்பதே உண்மை.
இன்று நமக்கு கிடைத்துள்ள பெருமானார் (ஸல்) அவர்கள்தான் சொல், செயல் அசைவுகள் எல்லாமும் இறை உதிப்பான குர்ஆனின் முழுமையும் நமக்கு இன்று புத்தக வடிவமாய் நாம் பின்பற்றிக் கொள்ள ஏதுவாய் இருப்பதற்கு முழு முதல் காரணமாய் இருப்பவர்கள் அருமைப் பெருமானார் (ஸல்) அவர்களின் புனித தோழர்களான சஹாபா பெருமக்கள் நல்ல ஈமான் கொண்ட இறைவனை நேசிக்க கூடிய பெருமானார் (ஸல்) அவர்களை பின்பற்றுபவன் எந்தக்காலமும் நன்றி செலுத்தக் கடமைபட்டவர்கள்தான் அண்ணலாரின் (ஸல்) அருமை சஹாபாக்கள் இவர்களில் யாரை பின் பற்றினாலும் நாயகம் (ஸல்) அவர்களின் ஹதீஸின்படி மார்க்கத்தை பின் பற்றியவர்களாகவே ஆவோம்.

ஏனெனில் அருமை சஹாபா பெருமக்களின் வாழ்வு முழுவதும் நாயகம் (ஸல்) அவர்களின் மீது கொண்ட நேசமும் மாறாத பாசமும் காரணம். இவர்கள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்வு முழுவதையும் நமக்கு தந்து உடலளவில் மறைந்து விட்டவர்கள் இவர்களுடைய சரித்திரங்கள் எல்லாம் பெருமானார் (ஸல்) அவர்களின் மீது பரிபூரண நேசங் கொண்டு தியாகிகளால் வாழ்ந்ததையே அடிப்படையாகக் கொண்டுள்ளது.
பெருமானார் (ஸல்) அவர்களின் உடல் மறைவிற்கு பிறகு அவர்களின் நடைமுறை வாழ்வு அனைத்தும் ஒரு விரல் அசைவுக்கூட விடாமல் இன்று நாம் பின்பற்ற கிடைத்துள்ளது. என்றால் அதற்கு முழு முதல் காரணம் தம் வாழ்க்கையே மார்க்கத்திற்கு தியாகம் செய்து ஹதீதுகளை தேடி சஹாபா பெருமக்களை கண்டு பெற்று நான்கு மதஹபுகள் மூலம் வழிக் காட்டிக் கொண்டிருக்கும் நான்கு இமாம்களே.

பெருமானார் (ஸல்) அவர்களின் முழுஅசைவுகளும் சஹாபா பெருமக்களிடமிருந்து பெறப்பட்டு அவற்றில் ஏதும் விடுபடாமலும் அதிகமான குழப்பங்கள் ஏற்பட்டு மார்க்கத்தில் பல பிரிவுகள் ஏற்பட்டுவிடாமலும் நான்கு மதஹபுகளில் பெருமானாரின் (ஸல்) அனைத்து அம்சமும் அடக்கப்பட்டடுள்ளது என்பதே மதகபுகளின் சிறப்பாகும்.
பெரும் குழப்பங்கள் தவிர்க்கப்பட்டு அதே சமயம் பெருமானார் (ஸல்) அவர்களை பின்பற்ற வேண்டிய மக்களுக்கு எல்லாக் காலத்திலும் வழியமைத்துக் கொடுத்த தியாக சீலர்கள் தான் ஹனபி ,ஷாபி ஹம்பலி, மாலிக்கீ ஆகிய நான்கு மதஹபுகளின் இமாம்கள் தான். இதன் மூலம்  பெருமானார் (ஸல்) அவர்களின் சுன்னத்தான வழிமுறையும் இவர்கள் மூலமாகவே நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
ஆனால் இன்று நாயகம் (ஸல்) அவர்களின் வழிமுறையை (சுன்னா) பின்பற்றுவதாக கூறிக்கொண்டு இஸ்லாத்தில் பிரிவுகள் இல்லை என்று கூறிக்கொண்டு மதஹபுகளை பின்பற்றாமல் மதஹபுகளின் அடிப்படைக் காரணங்களை அறியாது இஸ்லாத்தில் பல புதிய பிரிவுகளை சிலர் மார்க்க அறிஞர்கள் என்பதாக சித்தரித்துக் கொண்டு இஸ்லாத்தை சீர்குலைக்க பார்க்கின்றனர்.

பெருமானார் (ஸல்) அவர்களின் திருக்குடும்பங்களாகட்டும் சஹாபா பெருமக்களாகட்டும் நான்கு பெரிய மதஹபுகளின் இமாம்களாகட்டும் உண்மையாக இறைவனின்  மீது மாறாதக் காதல் கொண்டு அதன்படி செயலாற்ற பெருமானார் (ஸல்) அவர்களை தனது உயிருக்கும் மேலாக நேசித்து மரியாதைக் கொண்டு எந்த தவறுகளும் அவர்களின் சுன்னத்தான நடைமுறையில் ஏற்பட்டுவிடாமல் காத்து இன்று நாம் பின்பற்ற ஏதுவாக நம்கையில் தந்துள்ளனர் என்ற உண்மையை  நாம் உணர வேண்டும்.
“அல் உலமாவு வராதத்துல் அன்பியாயஎன்பது நாயகம் (ஸல் )அவர்களின் திருவாக்கு. இதன்படி உலமாக்கள் சொற்களையும் கேட்டு மார்க்கத்தை பின் பற்ற வழியும் உள்ளது.
வர்களும் மார்க்கத்தை வழி நடத்தி செல்வதில் பெரியப் பங்கு வகிக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது ஆனால் எப்படி பெருமானார் (ஸல்) அவர்கள் மீது பெரும் காதலும் மரியாதையும் கொண்டவர்களான நாயகம் (ஸல்) அவர்களின் திருக்குடும்பத்தார்கள் சஹாபா பெருமக்கள் நான்கு மதஹபுகளின் இமாம்கள் இருந்ததால்தான் அவர்களை நாம் பின்பற்றுகிறோமோ அதேபோல் எந்த ஒரு உலமாவும் பெருமானார் (ஸல்) தன் உயிருக்கும் மேலாக நேசித்து அதனால் பெருமானார் (ஸல்) அவர்களின் திருக்குடும்பத்தார்கள் மீதும் நேசங்கொண்டு தியாக சீலர்களாவும் சஹாபி பெருமக்கள் மீது எப்படி குத்துபு நாயகம் முஹையத்தீன் அப்துல்காதரிர் ஜிலானி (ரழி) அவர்கள் எந்த ஒரு சஹாபா பெருமக்களின் குதிரையின் கால் தூசிக்கு சமமாக மாட்டேன் என்று தன்னடக்கமாக மரியாதை கொடுத்தார்களோ அதேபோல் அவர்களிடமும் பணிவும் கொண்டு உத்தம தலைவர்களான நான்கு மதஹபுகளின் இமாம்கள் செய்த சேவையை தியாகத்தை போற்றி அவர்களில் ஒருவரை முறையாக பின்பற்றிக் கொள்கிறாரோ அப்படிப்பட்ட ஒரு உலமாவை நாம் பின்பற்றினால் அதுதான் நாயகம் (ஸல்) அவர்களின் ஹதீஸ்படி சரியாகும்.

இறைவனின் தூதை நிலை நிறுத்திய நமது உயிரிலும் மேலான தலைவர் நாயகம் (ஸல்) அவர்களின் அந்த உண்மை வாழ்வை இந்த உலக மக்களுக்கு  என்றும் எடுத்து கூறும் வாயிலாகவே நாயகம் (ஸல்) அவர்களின் புனித திருபரம்பரையினர்களும் சஹாபா பெருமக்களும் நான்கு மதஹபுகளின் இமாம்களும் பெருமானாரின் (ஸல்) முழுவாழ்வையும் பேணிக் கொண்ட உலமாக்களும் நம் மத்தியில் இருப்பதால் எந்தக் காலத்திலும் எம்பெருமானார் (ஸல்) அவர்களின் புனித இஸ்லாமிய வழி எவராலும் பின்பற்றிக் கொள்ள ஏதுவாகவே அமைந்துள்ளது.

இந்த அத்தனைபேருமே தூதர் நபி (ஸல்) அவர்களின் உண்மையை தூதர்களாகவே இந்த உலகத்தில் என்றும் பவனி வருகிறார்கள்.

வாழ்க இறைத்தூதர் புகழ்!
வளர்க தூதரின் (ஸல்) தூதுவர்கள்!

ஆக்கம் .என்.எம்.முஹம்மது யூசுப் ஹக்கியுல்காதிரி